;
Athirady Tamil News

உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகள்!

0

உலக மூளை ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும் வகையில் நடைபவனி மற்றும் மரதன் போட்டிகளை நடாத்தவுள்ளதாக
இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான வைத்தியர் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களப் பணிப்பாளர் முகுந்தன், யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி விஜிதரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நரம்பியல் நிபுணர் சங்கத்தின் ஊடாக வட மாகாண மக்களுக்கு மூளையின் ஆரோக்கியத்தை பேணுதல் எனும் தொனிப் பொருளில் வயது மற்றும் பால் வேறுபாடு இல்லாமல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.

உலக மூளை ஆரோக்கிய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் உலக நரம்பியல் சம்மேளனத்தினுடைய ஆலோசனைக்கமைய ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நரம்பியல் சம்பந்தமான மூளை சம்பந்தமான அமைப்புகள் ஒன்றிணைந்து மக்களிடையே மூளை பற்றிய கருத்துக்களை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாது மூளையுடன் சம்பந்தமான நோய்கள் எவை? அது ஏன் ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு கட்டப்படுத்தலாம்? என்பதை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்ட ஒரு தினமாக கருதப்படுகிறது. ஜூலை 22 ஆம் திகதி நாம் அந்த தினத்தை கொண்டாடுகிறோம். குறித்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலே இது சம்பந்தமாக ஆரம்ப கட்ட நிகழ்வாக இரண்டு நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இளம் சமுதாயத்தினருக்கு உடற்பயிற்சியை ஊக்குவிக்கவும், தடகள விளையாட்டுக்களில் பங்கேற்க செய்யும் வகையிலான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் மரதன் தடகள விளையாட்டை மேற்கொள்ளவுள்ளோம்.

மூளையை தாக்குகின்ற நோய்களில் மிகக் கொடூரமானதும் அதிகமாக எமது மக்களிடையே காணப்படுவது பக்கவாதமாகும். பக்கவாதம் சம்பந்தமான தனிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு நடைபவனியை ஏற்பாடு செய்துள்ளோம். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் ஒத்துழைத்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் கந்தர்மடம் சந்தியிலிருந்து நடைபவனி ஆரம்பித்து துரையப்பா விளையாட்டரங்கில் முடிவடையும்.

இந்த நிகழ்விலே பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ஆசிரியர்கள், அதிபர்கள் மட்டுமல்லாது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள், அவருடைய குடும்பத்தினர்கள், சிறுவர்கள், வயதுவந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்க அழைக்கின்றோம்.

மரதன் தடகள போட்டியில் பங்கேற்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவரும்
எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி பண்ணை பகுதியில் 5.30 மணியளவில் ஒன்றுகூடுவதன் மூலமாக இதில் பங்கேற்கமுடியும்.

பண்ணை பகுதியில் ஆரம்பிக்கும் மரதன் ஓட்டம் கந்தர்மடத்தை அடைந்து கல்வியன்காடு, கோப்பாய் ஊடாக உரும்பிராய், மருதனார்மடம், இணுவில், கொக்குவில் ஊடாக யாழ்ப்பாணம் துரைப்பா விளையாட்டரங்கில் நிறைவடையும்.

மரதன் ஓட்டத்தை இடை நடுவில் இருந்தும் குறிப்பிட்ட தூரத்தை ஓடுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகள், கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரச அலுவலகங்கள் போன்றவற்றுக்கு இது சம்பந்தமான விடயங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் அதிகளவானவர்கள் பங்குபற்றுவதன் மூலம் விளையாட்டு நிகழ்வை தாண்டி உடல் ஆரோக்கியத்தையும் மூளையின் ஆரோக்கியத்தையும் கூட தொடர்ச்சியாகப் பேணமுடியும் – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.