;
Athirady Tamil News

பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படை உருவாக்கம்!

0

பாகிஸ்தான் ராணுவத்தில், புதியதாக ராக்கெட் படை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் 79-வது சுதந்திர நாள் இன்று (ஆக.14) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையில் 4 நாள்கள் நடைபெற்ற மோதலை நினைவுக்கூரும் வகையில், சில முக்கிய அறிவிப்புகளை பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் நேற்று (ஆக.13) மாலை வெளியிட்டார்.

அப்போது, பாகிஸ்தான் ராணுவத்தில் புதியதாக அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ராக்கெட் படை ஒன்று உருவாக்கப்படும் என அறிவித்தார்.

இருப்பினும், புதியதாக உருவாக்கப்படும் அந்தப் படையின் விவரங்கள் குறித்து எந்தவொரு செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானின் இந்தப் புதிய படையானது, அவர்களது கூட்டாளியான சீனாவிடம் இருந்து ஈர்க்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் ராக்கெட் படையில் நிலம் சார்ந்த பாலிஸ்டிக், ஹைபர்சோனிக் மற்றும் அணு ஆயுத ஏவுகணைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் முப்படைகளின் தளபதிகளும் கலந்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவுடனான ராணுவ மோதலில் பாகிஸ்தான் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்றதாகக் கூறிய பிரதமர் ஷெரீஃப், இந்தியாவின் அணுசக்திக்கு பதிலளிக்க பாகிஸ்தானின் அணுசக்தி திறன் முக்கிய பங்காற்றும் எனவும், இருநாடுகளுக்கு இடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு உதவிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.