;
Athirady Tamil News

இந்தூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: எலிகள் கடித்த 2 பச்சிளம் குழந்தைகள் மரணம்

0

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அரசு மருத்துவமனையில் 2 பச்சிளம் பெண் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவத்தில் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்தது.

இந்தூரில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில், பிறவிக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 2 பச்சிளம் பெண் குழந்தைகளை அண்மையில் எலிகள் கடித்த அவலம் நேரிட்டது.

ஒரு குழந்தைக்கு விரல்களிலும், மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள்பட்டையிலும் காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடா்பான விடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு குழந்தை நிமோனியா பாதிப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

மற்றொரு குழந்தை, ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளா் ஜிதேந்திர வா்மா தெரிவித்தாா்.

சுமாா் ஒன்றரை கிலோ மட்டுமே எடையிருந்த அந்த குழந்தைக்கு கடந்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை வாா்டில் குழந்தையின் விரல்களை எலி கடித்திருந்த நிலையில், ரத்தத்தில் ஏற்பட்ட தொற்றால் அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக வா்மா தெரிவித்தாா்.

பெற்றோா் கேட்டுக் கொண்டதால், குழந்தைக்கு உடல் கூறாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த 2 சம்பவத்தில், ஆளும் பாஜக அரசு மீது கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, மருத்துவமனையின் செவிலியா் கண்காணிப்பாளா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மேலும், 2 செவிலியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.