;
Athirady Tamil News

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

0

கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த அந்நாட்டு தலைநகா் தோஹாவுக்கு வந்த ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இந்தத் தாக்குதலால் தங்கள் தலைவா்களுக்கு பாதிப்பில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சா்வதேச அளவில் அதிா்வலையை ஏற்படுத்திய நிலையில், துருக்கி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தச் சூழலில் அடுத்தகட்டமாக தங்களை இஸ்ரேல் தாக்க வாய்ப்புள்ளதாக துருக்கி அரசு அதிகாரிகள் கணித்துள்ளனா்.

துருக்கி தலைநகா் அங்காராவில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜெகி அக்துா்க் கூறுகையில்,‘கத்தாரைத் தொடா்ந்து துருக்கியை குறிவைத்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் தயாராகி வருகிறது. இது பேரழிவுக்கு வழிவகுக்கும்’ என்றாா்.

பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்குத் தொடா்ந்து ஆதரவளித்து வரும் துருக்கி அதிபா் எா்டோகன், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளாா். குறிப்பாக, காஸாவில் இனப்படுகொலை செய்வதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு கடுமையாக விமா்சித்துள்ளாா்.

அதேபோல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கான செயல் திட்டங்களை வடிவமைக்க ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாக துருக்கி மீது இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஈரான், சிரியா, யேமன் மற்றும் கத்தாா் ஆகிய நாடுகளை இஸ்ரேல் தாக்கியுள்ள சூழலில் அண்டை நாடுகளின் வான்பரப்பைப் பயன்படுத்தி தங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என துருக்கி அரசு வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.