பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா காலமானார் – பிரதமர் மோடி இரங்கல்
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் குமார் மல்ஹோத்ரா காலமானார். அவருக்கு வயது 94. வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மல்ஹோத்ரா, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
டெல்லி பாஜகவின் முதல் தலைவராக விஜய் குமார் மல்ஹோத்ராவே இருந்தார். 5 முறை எம்.பி.யாகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மல்ஹோத்ரா. டெல்லி அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய மல்ஹோத்ரா, வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
டெல்லியில் உள்ள ராக்பஞ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மல்ஹோத்ரா உடலுக்கு டெல்லி அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:“விஜய் குமார் மல்ஹோத்ரா தனித்துவமான தலைவராக விளங்கினார். மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்திருந்த மல்ஹோத்ரா, டெல்லி பாஜகவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. மல்ஹோத்ராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.