;
Athirady Tamil News

இருமல் மருந்தால் 20 குழந்தைகள் உயிரிழப்பு – பின்னணியில் தமிழ்நாட்டு நிறுவனம்

0

இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில், இருமல் சிரப் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெயிண்ட், மை, டை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைகால் என்னும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள் இருமல் மருந்தில் அதிகமாக கலக்கப்பட்டு, அது குழந்தைகளின் சிறுநீரகத்தில் செயலிழப்பை ஏற்படுத்தியுள்ளது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

’கோல்ட்ரிப்’ என்ற இந்த இருமல் மருந்து, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீசன் பார்மசூட்டிகல் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்த மருந்துக்கு மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை நடத்திய ஆய்வில், 350க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குழு தயாரிப்பு நிறுவனத்தில் வந்து ஆய்வு நடத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.