;
Athirady Tamil News

ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!

0

ஜப்பானின் புதிய பிரதமர் சனே தகைச்சியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (அக். 28) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த அக். 26 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்த அதிபர் டிரம்ப், ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோவை சந்தித்தார்.

இந்த நிலையில், ஜப்பான் அருகில் அமெரிக்காவின் கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் எனும் போர்கப்பலில் அமெரிக்க படைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சியை அவருடன் அழைத்து சென்றுள்ளார்.

ஜப்பான் பிரதமர் தகைச்சி மற்றும் அதிபர் டிரம்ப்பு இடையிலான சந்திப்பின்போது இருவரும் கைகுலுக்கினர். இதுகுறித்து, பேசிய அதிபர் டிரம்ப், “அது மிகவும் வலுவான கைகுலுக்கல்” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அடுத்த ஆண்டு (2026) அமெரிக்காவின் 250 ஆவது தேசிய நாளை முன்னிட்டு ஜப்பான் அரசின் சார்பில் 250 செர்ரி மரங்கள் பரிசாக அனுப்பப்படும் என பிரதமர் தகைச்சி கூறியதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரி கரோலின் லியாவிட் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென ஜப்பான் பிரதமர் தகைச்சி பரிந்துரைக்கக் கூடும் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தப் பயணத்தில் சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் தென் கொரியாவில் நேரில் சந்தித்து பேசவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.