ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரிய பிரஜ்வல் மனு தள்ளுபடி: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எஸ்.முடகல், வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் நேற்று தீர்ப்பை வெளியிட்டனர். அதில், ‘‘கீழமை நீதிமன்றம் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தின் தீவிரம் உணர்ந்தே ஆயுள் தண்டனை விதித்து உள்ளது.
எனவே மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்படவும், பிற வழக்குகளில் தொடர்புடைய தடயங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஜாமீனில் விடுவிக்க முடியாது”என உத்தரவிடப்பட்டுள்ளது.