பெலாரஸில் இருந்து பலூன்கள்: லித்துவேனியாவில் அவசரநிலை
பெலாரஸில் இருந்து வரும் பலூன்களால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லித்துவேனியா தேசிய அவசரநிலைய அறிவித்துள்ளது.
இது குறித்து லித்துவேனியா உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெலாரஸ் நாட்டிலிருந்து வரும் பலூன்கள் லித்துவேனியாவுக்குள் நுழைந்ததால், வில்னியஸ் விமான நிலையம் மூடப்பட்டது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், அவசரநிலை அறிவிக்கப்படுகிறது.
இந்த அவசரநிலை காரணமாக எல்லைப் பகுதிகளில் காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படையுடன் ராணுவம் இணைந்து செயல்பட அனுமதி கிடைக்கும். தேடுதல், கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்துக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் பெலாரஸில் இருந்து சுமாா் 600 பலூன்கள், 200 ட்ரோன்கள் லித்துவேனியாவுக்குள் ஊடுருவின. இதனால் 350 விமானங்கள் தாமதமாகின, அல்லது ரத்து செய்யப்பட்டன. 51,000 பயணிகள் பாதிக்கப்பட்டனா். வில்னியஸ் விமான நிலையம் 60 மணி நேரம் மூடப்பட்டது. இது 7.5 லட்சம் யூரோ இழப்பை ஏற்படுத்தியது.