;
Athirady Tamil News

சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையம்

0
யாழ்ப்பாணம் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின் பிடியிலிருந்து விடுவித்து குறித்த சுற்றுலா தளம் அமைக்கப்பட்டதன் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மண்டைதீவு கடற்கரை சுற்றுலா தளம் தொடர்பில் , பிரஸ்தாபிக்கப்பட்ட போதே உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்,

வேலணையில் அபிவிருத்தியையும், சுற்றுலா வலயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுலாவிகளுக்காக சுமார் 77 மில்லியன் செலவில் சுற்றுலா அமைச்ச்சினால் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த மண்டைதீவு சுற்றுலாதளமாகும்.

ஆனால் அது முறையற்ற பொறிமுறையாலும் சரியான பராமரிப்பின்மையாலும் சபைக்கான வருமானம் இழக்கப்பட்டுள்ளதுடன் எதிர்பார்த்த இலக்கை எட்டாது திட்டமும் முழுமையாகத் தோற்றுவிட்டது.

கொள்வனவு செய்யப்பட்ட படகுகள் அதுசார் இயந்திர உபகரணங்கள் அனைத்தும் உரிய பராமரின்றி முழுமையாக சேதமாகிக் கிடக்கின்றது.

மாறாக பல உபகரணங்கள் சூறையாடப்பட்டுள்ளதுடன், அது இன்று மதுபோதை அருந்தும் திடலாக , சமூக சீரழிவுக்கான களமாகவும் உருவாக்கப்படு வருகின்றது.

குறிப்பாக வெளி இடங்களிலிருந்து சுற்றுலாவாக அல்லாது சமூக சீர்கேட்டை மையமாகக் கொண்டே அதிகமானோர் இங்கு வருவதாக பலரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இதனால் எமது பிரதேசத்தின் மாண்பு பாதிக்கப்படுவதுடன், பிரதேசத்தின் நற்பெயருக்கும் இழுக்கு ஏற்படுகின்றது.

இவ்வாறு உருவாகி வரும் இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கான தார்மீக பொறுப்பு வேலணை பிரதேச சபைக்கே இருக்கின்றது.

எனவே சமூக சீரழிவை நோக்கி நகரும் மண்டைதீவு சுற்றுலா மையத்தை தற்போது வர்த்தக நோக்குடன் பராமரித்து முன்னெடுக்கும் தனியாரிடமும் இவ்விடயம் குறித்து விசரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதுடன் இழந்த வருமானத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Show quoted text
You might also like

Leave A Reply

Your email address will not be published.