வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு – பாடசாலை உயர் பாதுகாப்பு வலயத்தினுள் ..
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வலி வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட நான்கு உப அலுவலகங்களுக்கும் ஒவ்வொரு நூலகங்கள் உண்டு. ஏனைய மூன்று நூலகங்கள் அதற்குரிய இடங்களில் சிறப்பாக இயங்கினாலும் மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்ட நூல்நிலையமானது வசாவிளான் சந்தியில் இன்றளவும் விடுவிக்கப்படாமல் காணப்படுகின்றது.
குறிப்பாக தற்போது 2500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் அதிக நிலப்பரப்பு மயிலிட்டி உப அலுவலகத்திற்குட்பட்டதாகும். அதிலும் வசாவிளான் வீதியூடாகப் பயணிக்க முடிந்தாலும் வசாவிளான் சந்தியிலுள்ள நூல்நிலைய காணிக்குள் செல்லமுடியாத நிலையுள்ளது.
நாம் பல்வேறு நிலைமைகளை காட்டிக்கொண்டாலும் எங்களுடைய மக்கள் துன்பதுயரங்களுடன் கிட்டத்தட்ட 36 வருடங்களாக தமது சொந்த மண்ணில் வாழமுடியாமல் உள்ளனர்.
2025ம் ஆண்டு ”மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதம் கொண்டாடப்படுகின்றது. எமது பிரதேசத்திலும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும், மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாசாலைக்கு அருகாக செல்லும் வீதி விடுவிக்கப்பட்டாலும் அவர்களது பாடசாலை இதுவரை விடுவிக்கப்படவில்லை. தற்போது வசாவிளான் மத்திய கல்லூரிக்குரிய இடத்தில் தற்காலிகமாக இயங்கினாலும் குறித்த மாணவர்கள் வாசிப்பு மாத போட்டிகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். எமது எதிர்பார்ப்பும் இந்த பாடசாலைகள் மீண்டும் தமது சொந்த இடத்தில் மீளவும் இயங்க வேண்டும் என்பதேயாகும்.
தற்போது பிரதேசசபை செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்காகவும் தென்னிலங்கையினூடாக பிரஜாசக்தி என்ற நிகழ்ச்சி நிரலைக் கொண்டுவந்துள்ளனர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருப்பினும் தமது கட்சி சார் நபர்களை நியமித்து அவர்கள் மூலம் உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே. மக்களாகிய நீங்கள் யாரிடமும் மண்டியிடத் தேவையில்லை நேரடியாக பிரதேசசபையை அணுகி உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.