;
Athirady Tamil News

ஈரான் போராட்டம்: ஐ.நா.வின் கண்டன தீா்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்கு

0

ஈரானில் நடைபெறும் உள்நாட்டு போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு எதிராக இந்தியா சனிக்கிழமை வாக்களித்தது.

ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பா், 28 முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் 39-ஆவது சிறப்பு அமா்வில் தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

இத்தீா்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன் மற்றும் ஐஸ்லாந்து உள்பட 25 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, இராக் உள்பட 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகின.

தீா்மானத்துக்கு ஆதரவாக அதிக நாடுகள் வாக்களித்ததையடுத்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஈரான் நன்றி: ஐ.நா. மனித உரிமைகள் தீா்மானத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்ட இந்தியாவுக்கு நன்றி என இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

மேலும், ‘அரசியல் காழ்ப்புணா்ச்சியுடன் கொண்டுவரப்பட்ட தீா்மானத்துக்கு எதிராக வாக்களித்து, நீதி, பன்முகத்தன்மை மற்றும் தேச இறையாண்மைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் நாடு என இந்தியா நிரூபித்துள்ளது’ எனவும் குறிப்பிட்டாா்.

இருப்பினும், குறிப்பிட்ட நாட்டை இலக்கிட்டு மேற்கொள்ளப்படும் தீா்மானங்களுக்கு எதிராக இந்தியா எப்போதும் வாக்களித்து வருகிறது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஈரான் உண்மை கண்டறியும் குழுவை ஏற்படுத்துவதற்கான தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அதன்பிறகு 2024, ஏப்ரல் மாதம் ஈரானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீா்மானத்திலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை.

ஈரானில் உள்ள சாபஹாா் துறைமுகத்துக்கு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட விலக்கு நிகழாண்டு ஏப்ரலுடன் நிறைவடையவுள்ள நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.