;
Athirady Tamil News

வடமாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கை

0
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

தற்போது முகாமைத்துவ அலுவலர்கள் சேவைக்கான பொதுவான இடமாற்றக் கொள்கையே பின்பற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அதிசிறப்புத் தர முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கென தனியானதொரு இடமாற்றக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

அதற்கமைய, புதிய கொள்கையை உருவாக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

நிர்வாக உத்தியோகத்தர்களுக்கான கடமைப் பொறுப்புக்களைத் தெளிவாக வரையறுத்தல், சில திணைக்களங்களில் அவர்களுக்குரிய தனிப்பட்ட அலுவலக இடவசதிகளை உறுதி செய்தல் மற்றும் விசேட பயிற்சிகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இவற்றையும் ஏற்றுக்கொண்ட ஆளுநர், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களாகக் கடமையாற்றும் அதிசிறப்புத் தர உத்தியோகத்தர்கள், விடுமுறைக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

மேலும், செயலாளர்கள் உத்தியோகபூர்வ நாட்குறிப்பை பேணுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பிலும் சாதகமாகப் பரிசீலிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.