யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளுடன், பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், நிதியாளர், நூலகர், மற்றும் பதிவாளர் அணிவகுத்து வர, கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகை தந்த துணைவேந்தரும், வேந்தரும் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினர்.
இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
