;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

0

பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பஜௌர், பன்னு ஆகிய பகுதிகளில் அண்மைக் காலத்தில் ஆப்கானிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் அமைந்ததாக பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட ஆப்கன் பிராந்தியத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட உயிர்ப்பலி ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தானின் வான் வழி தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு கண்டனம் தெரிவித்து சம்மன் அனுப்பியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி இருக்கும் என்றும் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.