;
Athirady Tamil News

கொலம்பியா ரசியலில் டிஜிட்டல் புரட்சி ; தேர்தலில் AI குறித்து கடும் விவாதம்

0

கொலம்பியா பார்லிமென்ட் தேர்தலில், ‘கைத்தானா’ எனும் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய வேட்பாளரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், அடுத்த மாதம் 8ம் திகதி பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அந்நாட்டு பூர்வீக குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒன்றில், ஏ.ஐ., வேட்பாளரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கைத்தானா எனும் ஏ.ஐ., வேட்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் கருவிகள் வாயிலாக, பூர்வீக குடிமக்களின் குரல்களை வலுப்படுத்துவதற்கான அரசியல் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனையாக, இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

16ம் நுாற்றாண்டில் ஸ்பானிய காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒரு பூர்வீக குடிமக்களின் தலைவியின் பெயரை குறிக்கிறது. இந்த பெயர் அந்த டிஜிட்டல் உருவத்திற்கு வரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவத்தை சேர்க்கிறது.

அரசியல் பங்களிப்பு, கொள்கை ரீதியிலான தகவல் தொடர்பு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில், குறிப்பாக பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள குழுக்களுக்கு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவ முடியும் என்பதை ஆராய்வதற்கான ஒரு முயற்சியாக, இது உருவாக்கப்பட்டதாக, இதை உருவாக்கியவர்கள் விவரிக்கின்றனர்.

கைத்தானா, தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி, இணையத்தில் ஆர்வத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தாலும், கொலம்பியா தேர்தல் சட்டத்தின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்.

இந்நிலையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைத்தானாவே வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதா அல்லது இந்த ஏ.ஐ. தளத்தை பயன்படுத்தி, மனித வேட்பாளர் போட்டியிடுவாரா என்பது பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நடவடிக்கையை சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை துாண்டியுள்ளது. சிலர், இதை புதுமையானது என்று பாராட்டியுள்ளனர்.

ஒரு சிலர் ஜனநாயக செயல்முறைகளில் தொழில்நுட்பம் இவ்வளவு நேரடி பங்கை வகிக்க வேண்டுமா என, கேள்வி எழுப்புகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.