;
Athirady Tamil News

காசா மருத்துவர்களைக் கொல்ல இஸ்ரேலியப் படைகள் 900 துப்பாக்கிப் பிரயோகம் ; அதிர்ச்சிதரும் அறிக்கை

0

காஸாவின் ரஃபா நகருக்கு மேற்கே கடந்த மார்ச் மாதம் மனிதாபிமானப் பணியாளர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்த கொடூரத் தாக்குதல் குறித்த அதிரவைக்கும் புதிய புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘போரன்சிக் ஆர்க்கிடெக்சர்’ (Forensic Architecture) மற்றும் ‘இயர்ஷொட்’ (Earshot) ஆகிய ஆய்வு நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த விரிவான ஆய்வில், 15 உதவிப் பணியாளர்கள் திட்டமிட்டு “துப்பாக்கி முனையில் வைத்து” படுகொலை செய்யப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி தல் அஸ்-சுல்தான் (Tal as – Sultan) பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தெளிவாக அடையாளப்படுத்தப்பட்ட பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கத்தின் நோயாளர் காவு வண்டி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலிய சிப்பாய்கள் 900க்கும் மேற்பட்ட தோட்டாக்களால் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ரிஃபாத் ரத்வான் என்ற மருத்துவப் பணியாளரின் கைபேசியில் பதிவான காணொளியை ஆய்வு செய்தபோது, வெறும் ஐந்து நிமிடங்களில் 844 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

ஒரு நிமிடத்திற்கு 900 தோட்டாக்கள் பாயக்கூடிய வேகத்தில், சுமார் 40 மீற்றர் தொலைவில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஆரம்பக்கட்டத் துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பியவர்களை இஸ்ரேலிய சிப்பாய்கள் தேடிச் சென்று சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

குரல்பதிவு ஆய்வுகளின்படி, சிப்பாய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அருகே (1முதல் 4 மீற்றர் தொலைவில்) நின்று, தரையில் விழுந்து கிடந்தவர்களைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இது ஒரு “மரணதண்டனை பாணியிலான” (Execution-style) படுகொலை என்பதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

படுகொலைக்குப் பின்னர், இஸ்ரேலிய இராணுவம் அங்கு நிலவிய சான்றுகளை முற்றாக மறைக்க முயன்றமை செயற்கைக்கோள் படங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது.

புல்டோசர்கள் மூலம் ஆம்புலன்ஸ்கள் மற்றும் உதவி வாகனங்கள் நசுக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டன. கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களும், அவர்களின் கைபேசிகளும் தடயமே தெரியாமல் புதைக்கப்பட்டுள்ளன.

அல் ஜசீரா ஊடகத்தின் ‘ஸனத்’ (Sanad) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு முன்னதாக வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களும் இந்த ஆதாரங்களை மறைக்கும் செயலை உறுதிப்படுத்தியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டின் போது பதிவான ஹீப்ரு மொழி உரையாடல்களை ஆய்வு செய்ததில், இத்தாக்குதலில் ஈடுபட்ட ‘லாலாஸ்’ (Lalas), ‘யோதம்’ (Yotam) மற்றும் ‘அமட்சியா’ (Amatzia) ஆகிய மூன்று இஸ்ரேலிய சிப்பாய்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

“லாலாஸ், நீ முடித்துவிட்டாயா?” மற்றும் “அவர்கள் மீது துப்பாக்கிகளை வை” போன்ற அவர்களின் உரையாடல்கள் பதிவாகியுள்ளன.

இஸ்ரேல் இதனை ஒரு “தொழில்நுட்பத் தவறு” என்று மழுப்ப முயன்றாலும், இது ஒரு திட்டமிட்ட போர் குற்றம் (War Crime) என்பதை இந்தப் புதிய தடயவியல் அறிக்கை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளதாக அல் ஜசீரா சிறப்புக் கட்டுரை தெரிவிக்கிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.