;
Athirady Tamil News

ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!

0

பாரசீக வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு கடற்படைப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியாக, சரக்குக் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது. ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் போர் காரணமாக அந்த வழி மூடப்பட்டது.

இதனால், அந்த வழியாகப் பயணிக்க வேண்டிய இந்திய கப்பல்கள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் சிக்கின. அவற்றில் சில கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்தன. பிற கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோலியம் பொருள்களை ஏற்றிவரச் சென்றன.

பாரசீக வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளில் ஏவுகணை, டிரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பாரசீக வளைகுடா வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களுக்கும் கடற்படைப் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நிதி மேம்ப்பாட்டுக் கழகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “வளைகுடா வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களுக்கும், குறிப்பாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஆபத்து காப்பீடு மற்றும் கடற்படைப் பாதுகாப்பு வழங்க அமெரிக்க மேம்பாட்டு நிதி கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

இது அனைத்து கப்பல் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களை விரைவில் அழைத்துச் செல்லத் தொடங்கும். உலக நாடுகளுக்கான எரிசக்தி விநியோகம் எவ்விதத் தடையும் இன்றி கிடைப்பதை அமெரிக்கா உறுதி செய்யும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.