புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 962 இலட்சம் ரூபாய் நிதி செலவில் இலவச காப்புறுதி திட்டம்
நடப்பாண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் பணியகத்தில் பதிவு செய்யும் போது வழங்கப்படும் இலவச காப்புறுதித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் இதுவரை 116 தொழிலாளர்களுக்கு 39.76 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5,774 பிள்ளைகளுக்கு 55.63 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசேட தேவையுடைய 34 பிள்ளைகளுக்கு 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், 14 குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவுகளுக்காக 2 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாயும் பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பணியின் போது உயிரிழக்க நேரிடும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 6 இலட்சம் ரூபாயிலிருந்து 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது