;
Athirady Tamil News

அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்!

0

அமெரிக்க கடற்படையின் முதன்மை போர்க் கப்பல் ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக வியாழக்கிழமை ஈரான் அறிவித்தது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து ஈரானின் கடற்படை மற்றும் விமானப் படைகளை குறித்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது.

பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலைக் குறிவைத்தும், ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய விமானம் தாங்கிப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படை அறிவித்துள்ளது.

ஓமன் கடற்பரப்பில் இருந்த ஆபிரகாம் லிங்கன் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இயங்க முடியாத வகையில் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மறுப்பு

ஈரானின் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் பென்டகன் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலின் புகைப்படத்தை வெளியிட்டு, ’ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’க்கு தொடர்ந்து உதவி செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகள் ஆபிரகாம் லிங்கன் அருகில்கூட வரவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

ஈரானுடனான போர்த் தொடங்குவதற்கு முன்னதாகவே மத்திய கிழக்கு நாடுகளின் கடற்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக அமெரிக்காவின் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களான ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு அனுப்பப்பட்டிருந்தது.

மேலும், இத்துடன் அரபிக் கடலில் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் 6-க்கும் மேற்பட்ட அதிநவீன போர்க் கப்பல்களை அமெரிக்கா நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.