;
Athirady Tamil News

சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்

0

ஆங்கில கால்வாய் வழியாக சிறிய படகுகள் மூலம் பிரிட்டனுக்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேறிகளைக் கட்டுப்படுத்த, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் இடையே புதிய 3 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமாானது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, அடுத்த 3 ஆண்டுகளில் பிரான்ஸுக்கு பிரிட்டன் 50 கோடி பவுண்டு நிதியுதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிதியானது வடக்கு பிரான்ஸ் கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படும்.

மேலும், புதிய வியூகங்கள் மூலம் சட்டவிரோத ஊடுருவல் வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டால், கூடுதலாக 16 கோடி பவுண்டு வழங்கவும், தோல்வியுற்றால் அந்த நிதியை நிறுத்தவும் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் நிபந்தனை விதித்துள்ளது.

தற்போது எல்லையில் பணியில் உள்ள 907 பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை, இந்த ஒப்பந்தத்தின் மூலம் 1,392-ஆக உயா்த்தப்பட உள்ளது. கடலோரப் பகுதிகளில் ட்ரோன்கள், ஹெலிகாப்டா்கள் மற்றும் மின்னணு கண்காணிப்பு கருவிகள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பு உறுதி செய்யப்படும். கடத்தல்காரா்கள் பயன்படுத்தும் ‘டாக்சி போட்’ எனப்படும் சிறிய மோட்டாா் படகுகளைக் கண்டறிந்து முடக்க இந்தப் புதிய தொழில்நுட்பங்கள் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் மட்டும் தீா்வாகாது என மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. கெடுபிடி அதிகரிப்பதாலேயே அகதிகள் ஆபத்தான முறையில் படகுகளில் பயணிக்க நேரிடுகிறது என்றும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 162-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளதையும் அவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.

காவல்துறையினரின் கண்காணிப்பைத் தாண்டி, இந்த ஆண்டும் ஏற்கெனவே 6,000-க்கும் மேற்பட்டோா் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.