;
Athirady Tamil News

2026 ஆம் ஆண்டுக்குரிய வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்கள் முடக்கம்!

0

2026 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரியர் இடமாற்றங்கள் வட மாகாணத்தில் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் அருள்வதன்ன் டினோசன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சேவையின் தேவையைக் கருத்திற்கொண்டு இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தேசிய மட்ட இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என்ற காரணம் உண்மைக்குப் புறம்பானது மற்றும் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் இடமாற்றங்கள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், வழமையாக ஆசிரியர் இடமாற்றங்கள் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றாலும், இவ்வாண்டு அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதது கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் பதிலீட்டு ஆசிரியர்கள் இருந்தபோதிலும் இடமாற்றம் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படாத நிலை தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வன்னி போன்ற கடின சேவைப் பகுதிகளில் ஒன்பது ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குக் கூட இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாக ஆசிரியர்களின் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வு
இதற்கு மாறாக ஆசிரியர்களின் சம்பளங்களில் எந்த உயர்வும் இல்லாததால் அவர்கள் கூடுதல் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் திட்டமிட்ட முறையற்ற இடமாற்றங்களால் சில ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும் நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளுடன் இடமாற்றம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பல ஆசிரியர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, உரிய காலக்கட்டத்தில் நியாயமான முறையில் ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தாய்மொழி ஆசிரியர் சங்கம் தாழ்மையுடன் கோருகிறது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.