;
Athirady Tamil News

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க கனவு காணும் நாமல் ராஜபக்ச

0

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரசாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அணியினரும், நாமல் ராஜபக்சவின் தரப்பினரும் பகற்கனவு காண்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.

எனினும் அவர்களின் இந்தக் கனவு ஒருபோதும் நனவாகப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள அமைச்சர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினரும் தங்களின் அரசியல் வறட்சியை மறைப்பதற்காகவே, நாடு மீண்டும் பொருளாதாரப் படுகுழியை நோக்கிச் செல்வதாகக் கூறி நாடகமாடுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்தவர்கள்….
எமது அரசின் மக்கள் நலன்சார் வேலைத்திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சியினர், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை விதைப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், தற்போதைய அரசானது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட, மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு பலமிக்க அரசாகும் என்றார்.

ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய இந்த ஆணையை எந்தவொரு அரசியல் சக்தியாலும், பொய்ப் பிரசாரங்களாலும் அசைக்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும் , கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்தவர்கள் மீண்டும் குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது வேடிக்கையானது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.