யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.
குறித்த குழுவினருடன் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இணைந்து இராணுவ கட்டுப்பாட்டில் மக்களின் காணிகளை நேரில் பார்வையிட்டனர்.
“மக்களின் காணிகள் மக்களுக்கே .. ” என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய காணிகளை விடுவிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் , பலாலி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் , உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தனியார் காணிகளுக்குள் சென்று காணி விடுவிப்பு தொடர்பிலான சாத்தியங்கள் குறித்து நேரில் ஆராய்ந்தனர்.
அதனை தொடர்ந்து பலாலி இராணுவ வைத்தியசாலை வளாகத்தில் குறித்த குழுவினர் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.