;
Athirady Tamil News

என் குடும்பம் சிதைந்துவிட்டது! குடியரசுத் தலைவருக்கு கேத்தன் தந்தை உருக்கமான கடிதம்!

0

புணேவில் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வாலின் தந்தை விஷ்ணு அகர்வால், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புணேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கு சியா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில், சியா தனது காதலன் சேத்தனுடன் சேர்ந்து கேத்தனை மலைக்கோட்டையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இந்த வழக்கில், சியா, சேத்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், விரைவான நீதிக் கேட்டு, கேத்தனின் தந்தை குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

”வலியும், நம்பிக்கையும் நிறைந்த இதயத்துடன் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன். நான் ஒரு தொழிலதிபராகவோ அல்லது செல்வாக்குமிக்கவராகவோ இதை எழுதவில்லை. மகனுக்கு நீதி தேடும் தந்தையாக மட்டுமே எழுதுகிறேன்.

கேத்தனை இழந்த வெறும் 20 நாள்களில் என் தந்தையையும் இழந்துள்ளேன். அவர் தன் பேரனை எல்லாத்தைவிடவும் அதிகம் நேசித்தார். அவனின் மரண அதிர்ச்சியும் துங்கத்தையும் தாங்க முடியாமல், வெறும் 20 நாள்களில் இறந்துவிட்டார். மகனையும் தந்தையையும் இழந்து நிற்கிறேன்.

எங்கள் குடும்பம் சிதைந்துவிட்டது.

நாங்கள் எந்தவொரு சிறப்பு சலுகையையும் கேட்கவில்லை. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம், எங்களைப் போன்ற குடும்பங்களின் வலியை மட்டுமே அதிகரிக்கும்.

தயவுசெய்து என் மகனின் வழக்கை மற்றுமொரு கோப்பாக மட்டும் ஆக்கிவிடாதீர்கள். இந்த வழக்கின் பின்னால், எல்லாவற்றையும் இழந்த ஒரு குடும்பம் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.