யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ் மாநகர சபை மாதாந்த அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் தேநீர் இடைவேளையின் போது மாநகர சபையின் ஆணையாளர் அலுவலகம் முன்பாக ஒன்று கூடிய மாநகர சபை மக்கள் பிரதிநிதிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் கூட்டுப் பங்களிப்புடன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாநகர சபை அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளினால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் மக்களின் அடிப்படை நலன்களை உரிய முறையில் நிறைவேற்றவும், மக்களை சென்றடையவும் முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.
மாநகர சபையின் ஊடாக மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அத்தியாவசிய சேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் என்பனவற்றில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதங்கள் ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு முடக்க முற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
முன்னதாக, சபை அமர்வின்போது குறித்த அதிகாரிகளின் திட்டமிட்ட இடையூறுகள் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் விவாதித்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் கருத்து கேட்க முற்பட்டபோது,
ஊடகங்களை சந்திக்கவோ கருத்து கூறவோ தனக்கு அவசியம் இல்லை என யாழ் மாநகர சபை ஆணையாளர் அரவிந்தராஜ் தெரிவித்தார்.