அருட்பணி ஜிம்பிறவுண் அடிகள் காணாமற்போய் 20ஆம் ஆண்டு – நீதி கோரி நினைவு நடைபவனி! சூழகம் ஏற்பாட்டில் மரநடுகை!!
அருட்பணி ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களை நினைவுகூர்ந்து நீதி கோரி நினைவு நடைபவனி இன்று (20/08) அல்லைப்பிட்டி பிரதேசத்தில் தீவக மறைக்கோட்ட முதல்வர் லியோ ஆம்ஸ்ரோங் அடிகளாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
அருட்பணி ஜிம் பிறவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் காணாமலாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த நினைவு நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகிறது.
இந் நடைபவனி தீவகம் அல்லைப்பிட்டி சந்தியிலிருந்து பிலிப் நேரியார் தேவாலயம் வரையில் பேரணியாக சென்று , தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி இடம்பெற்றது. அத்துடன் சூழலியல் மேம்பாடு அமைவனம் – Soozhagam – சூழகம் செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் தேவாலயத்தில் இருபது மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.
நினைவு நடைபவனியில் பங்கேற்றவர்கள் உண்மை வெளிப்படுத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த கத்தோலிக்கத் திருத்தந்தையான ஜிம் பிறவுண் அடிகளார் அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரி தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வந்த காலப்பகுதியில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தனது உதவியாளரான வின்சன் விமலதாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , அல்லைப்பிட்டி கடற்படை முகாமை அண்மித்த பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

