கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி
நைரோபி (கென்யா): கென்யாவின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை காலை சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், ஐந்து அமெரிக்க நாட்டினர் மற்றும் ஈக்வடாரின் உளவுத்துறைத் தலைவர் உள்பட ஏழு பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கென்யாவின் லைசபா பகுதியில் உள்ள தேசிய பூங்காவை சுற்றிப்பார்ப்பதற்காக புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் 7 பேர் சுற்றுலா ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். ஹெலிகாப்டர் அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதியில் பறந்துபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து சம்புரு கவுன்டியில் உள்ள ஒலோலோக்வே மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து கென்யாவின் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது. விபத்து குறித்து போலீசாரும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில் ஈக்வடாரின் உளவுத்துறை அமைப்பின் தலைமை இயக்குநரான சென்சி-கான்டுகி மற்றும் அவரது மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான ஸ்டெஃபனி சென்சி ஆகியோரும் பலியானவர்களில் அடங்குவர் என்று ஈக்வடாரின் அரசு ஊடகங்களை மேற்கோள் காட்டி சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அமெரிக்க நாட்டினர் ஐந்து பேர் பலியானதை அமெரிக்க வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கென்யா செஞ்சிலுவைச் சங்கம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியுள்ளது.