;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

0
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாவும் , உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, புதிதாக பதவியேற்றுள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இதன்போது, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், வடக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த சேவையை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சந்திப்பின்போது, ஆளுநர். யாழ்ப்பாண மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தாம் கடமையாற்றியதை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க நினைவுகூர்ந்தார். இதன்போது வடக்கு மாகாணத்தின் நிலைமை மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் அண்மைக்காலத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், குறிப்பாக உயிர்கொல்லி போதைப்பொருட்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது, அத்துடன் வீதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இளையோரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இவ்விடயங்களில் தொடர்புடைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜெயமகாவும்  கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.