தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை
காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி குறித்து பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, காலி திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது தந்தையை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியதாகக் கூறி நபர் ஒருவர் குறித்த பொலிஸ் நிலையத்தினுள் அமைதியற்ற முறையில் நடந்துகொள்வதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
குறித்த காணொளியில் தந்தை எனக் குறிப்பிடப்படும் முதியவர், நேற்று (24) இரவு மதுபோதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டமையினால் அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகளால் அந்த நேரத்திலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது இந்த சந்தேகநபர் ஓட முயன்றதாகவும், ஓட முடியாமல் கீழே விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்கான அடையாளங்கள் காணொளியில் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், அந்த நபரை அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (25) பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, குறித்த நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.