;
Athirady Tamil News

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முப்படையினர் உறுதிபூண்டுள்ளனர்!!

0

கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார்.

இதன்போது தொடர்ந்துரைத்த பாதுகாப்புச் செயலாளர், இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை என்றும் இலங்கையர் எவரும் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

அரச புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் இன்று ஒரே பலமான வலையமைப்பாகச் செயற்படுவதாகவும் கமல் குணரத்ன தெரிவித்தார்.

உயிர்த் தியாகம் செய்து போர் வீரர்கள் பெற்றுக்கொடுத்த சுதந்திரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கேள்விக்குறியாகியது. கடந்த ஆட்சியின் போது விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப் படவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்புக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

நாடு இராணுவ மயமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஓய்வுபெற்ற சில இராணுவ அதிகாரிகள் அரசாங்கப் பதவிகளை வகிப்பது ஒருபோதும் இராணுவமயமாக்கல் அல்ல என்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பல வருடங்களாகப் பெற்றுக்கொண்ட தமது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைபுரிவது ஒரு தவறான விடயமா என்றும் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் இராணுவத்தினரின் பொறுப்பாகும். இதில் இராணுவத்தினர், கடற்படை மற்றும் விமானப்படையினர் முக்கிய பங்காற்றி வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு வருடங்களில், நாட்டின் அபிவிருத்திக்காக இலங்கையின் முப்படையின் பங்களிப்பை தெளிவுபடுத்திய இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, நாட்டின் அபிவிருத்திக்காக இலங்கை இராணுவத்தினர் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, கொவிட் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிகிச்சை நிலையங்கள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். அத்துடன், தடுப்பூசி வேலைத்திட்டத்தில் இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் பாரிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றியதாகவும் குறிப்பிட்டார்.

கடற்படை தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் கெப்டன் இந்திக டி சில்வா அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், ஒரு தீவு நாடாக இலங்கை கடற்படைக்கும் முக்கிய பொறுப்புகள் உள்ளனவெனக் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் 35 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப் பொருட்களை இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ளதாகவும் இது, நாட்டின் முதல் பாதுகாப்பு வலையமாக நாட்டுக்கும் இளைஞர்களின் எதிர்காலத்துக்கும் பெரும் சேவையாக அமைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கை கடற்படையின் சிவில் பொறியியல் பிரிவானது, நிர்மாணத் துறையில் விரிவான பங்களிப்பைச் செய்து வருகிறது. மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது. கரையோரச் சூழலியல் வலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், சதுப்பு நிலங்களைச் செப்பனிடுவதன் மூலம் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கும் இலங்கை கடற்படை செயற்பட்டு வருவதாகவும் கெப்டன் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்தார்.

கொவிட் 19 தடுப்பு மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டத்திலும் இலங்கை கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை விமானப்படைத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்கவும் இதன்போது கருத்துக்களைத் முன்வைத்தார்.

கொவிட் 19 தொற்றுப் பரவியுள்ள நிலையில், இலங்கை விமானப்படையினர் கிருமி நீக்கம் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதோடு, “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இலங்கையில் காடு வளர்ப்பை மேம்படுத்துவதற்காக பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வான்வழி விதைகளை வீசுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களுடன் நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை பொலிஸாருடன் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்துக்காக இலங்கை விமானப்படை தீவிர பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.