;
Athirady Tamil News

ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி – மந்திரிகள் குழு முடிவு..!!

0

குதிரை பந்தயம், கேளிக்கைகள் (கேசினோ) மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தற்போது 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சேவைகளை சிறப்பாக மதிப்பிட்டு கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆய்வு செய்ய கடந்த ஆண்டு மந்திரிகள் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது. மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா தலைமையில் தமிழக நிதி அமைச்சர் உள்ளிட்ட 8 மாநிலங்களின் மந்திரிகள் அடங்கிய இந்த குழுவினர், மேற்படி குதிரை பந்தயம், கேசினோ மற்றும் ஆன்லைன் விளையாட்டு போன்ற சேவைகளை மதிப்பிட்டு வந்தனர்.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த குழுவின் கூட்டத்தில் மேற்படி 3 சேவைகளின் வரியை 18-ல் இருந்து 28 சதவீதமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த குழுவினர் கூடி விவாதித்தனர். இதில் இந்த சேவைகளுக்கான வரியை 28 சதவீதமாக உயர்த்துவது இறுதி செய்யப்பட்டதுடன், இதற்காக இந்த சேவைகளை மதிப்பிடும் முறையையும் இறுதி செய்தது.

இது தொடர்பான அறிக்கை ஓரிரு நாட்களில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்படும் என கன்ராட் சங்மா கூறியுள்ளார். இது குறித்து அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.