;
Athirady Tamil News

பெங்களூருவில் சம்பவம் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை..!!

0

பெங்களூருவில், குழந்தையை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்
பெங்களூரு கோனனகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுஞ்சனகட்டே அருகே எஸ்.பி.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்தவர் மகேஷ்குமார் (வயது 44). இவரது மனைவி ஜோதி (29). இந்த தம்பதிக்கு 9 வயதில் நந்தீஸ் கவுடா என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் பள்ளி ஒன்றில் படித்து வந்தான். பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக மகேஷ்குமார் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், மகேஷ்குமார் வீடு நேற்று நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது மகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

புற்று நோயால் தற்கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்து வநத கோனனகுன்டே போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ஒரு அறையில் மகேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார். மற்றொரு அறையில் ஜோதியும், அவரது மகனும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார்கள். அவர்களது உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். மேலும் மகேஷ்குமார் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், புற்றுநோய் காரணமாக தான் அவதிப்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும் கூறி இருந்தார். மேலும் கணவர் தற்கொலை செய்ததால், ஜோதி தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, அவரும் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து கோனனகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.