;
Athirady Tamil News

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை-சாதனை விளக்க மாநாடு, சட்டசபை தேர்தல் குறித்து விவாதித்தனர்..!!

0

பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் தொட்டபள்ளாப்புராவில் வருகிற 8-ந் தேதி சாதனை விளக்க மாநாடு மற்றும் சட்டசபை தேர்தல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பா.ஜனதா தலைவர்கள் ஆலோசனை
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மந்திரிகள் கோவிந்த கார்ஜோள், அசோக், முன்னாள் மந்திரி ஈசுவரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெங்களூரு புறநகரில் வருகிற 8-ந் தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளதால், அரசின் ஒரு ஆண்டுக்கான சாதனை விளக்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து விரிவாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிரதமர் உத்தரவு குறித்து…
அதே நேரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மங்களூருவுக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படியும் முதல்-மந்திரி உள்ளிட்ட தலைவர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார். இதுபற்றியும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டசபை தேர்தலில் 140 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களை இழுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக சட்டசபை தோ்தலுக்காக இப்போதில் இருந்தே மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்ப்பதுடன், மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவலகள் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.