;
Athirady Tamil News

எந்த குழப்பமும் இல்லை.. முடிவு எடுத்துவிட்டேன்- ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி..!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று காலையில் ராகுல்காந்தி, 3-வது நாள் பாதயாத்திரை தொடங்கினார். முன்னதாக தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் எல்லை போராட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா பங்கேற்றார். இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு பாத யாத்திரையை ராகுல்காந்தி தொடங்கினார். தொண்டர்கள் புடை சூழ ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார்.

அவருடன் எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஏஞ்சலின் ஷரோனா, நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் பாத யாத்திரையில் கலந்து கொண்டனர். ராகுல்காந்திக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பார்வதிபுரம், சுங்கான் கடை வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி பாத யாத்திரையாக சென்று புலியூர் குறிச்சி சென்றடைந்தார். பின்னர் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.

அப்போது தலைவர் பதவி வேண்டாம் என கூறிவிட்டு நாடு ஒற்றுமையாக இருக்க யாத்திரை செல்வது முரண்பாடாக இருப்பதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- கட்சியின் தேர்தல் வரும்போதுதான் நான் தலைவர் ஆவேனா இல்லையா என்பது தெரிய வரும். அதே சமயம், நான் எந்த பொறுப்புக்கு வர வேண்டுமோ அது தொடர்பாக முடிவு எடுத்துவிட்டேன். அதில் எந்த குழப்பமும் இல்லை. எனவே தேர்தல் வரும் வரை பொறுத்திருங்கள். இந்திய ஒற்றுமை நடைபயணம் என்பது காங்கிரஸ் கட்சியின் முடிவு. கட்சி உறுப்பினர் என்ற முறையில் யாத்திரை செல்கிறேன். காங்கிரஸ் கட்சியிலும் சரி, நடைபயணத்திலும் சரி எந்த முரண்பாடும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களுக்கு என்னைவிட பாஜக அதிக அழுத்தம் தருவதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.