;
Athirady Tamil News

ஒடிசாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு 3 பயணிகள் பலி..!!

0

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் இன்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. பொதுவாக ரெயில் நிலையங்களில் சரக்கு ரெயில்கள் வரும்போது மிக மெதுவாகவே இயக்கப்படும். ஆனால் இந்த சரக்கு ரெயில் மிக வேகமாக சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் நிலையத்துக்கு உள்ளேயே அந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது. ரெயில் நிலைய தண்டவாளத்தை இடித்து தள்ளி நொறுக்கிய சரக்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்து நிகழ்ந்த போது ஏராளமான பயணிகள் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் புவனேஸ்வர் செல்லும் பயணிகள் ரெயிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். திடீரென சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். என்றாலும் பல பயணிகள் சரக்கு ரெயில் பெட்டி அடியில் சிக்கி கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிழக்கு கடலோர ரெயில்வேயின் 2 மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நொறுங்கி கிடந்த சரக்கு பெட்டிகளை விரைவாக அகற்றி காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டனர். அப்போது 3 பயணிகள் உடல் நசுங்கி பலியாகிகிடப்பது தெரிந்தது. காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதில் கோரே ரெயில் நிலையம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பிளாட் பாரம் நொறுங்கி தகர்ந்துள்ளது. சரக்கு ரெயில் தடம் புரண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக இயக்கப்படும் ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.