;
Athirady Tamil News

டெல்லியை அலற வைத்த இன்னொரு கொலை- கணவனை கொன்று 22 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்த மனைவி..!!

0

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது. அதே போன்று டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவி, மகன் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளார்.

டெல்லியை பதற வைக்கும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டெல்லி கிழக்கில் இருக்கும் பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இவர்களுக்கு தீபக் என்ற மகன் இருக்கிறான். அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதனால் பூனம் கணவரை கொல்ல முடிவு செய்தார். கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்தார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்தது. பின்னர் கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார். மகன் உதவியுடன் இந்த செயல்கள் அனைத்தையும் பூனம் செய்தார். வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்தார். உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று வீசினார்.

கண்காணிப்பு கேமிராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. தீபக் இரவில் கையில் பையுடன் செல்வது தெரிந்தது. அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வது பதிவாகி இருந்தது. கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்தனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவரது உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.