;
Athirady Tamil News

விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைக்காக பெண் பயணிகள் குடுமிப்பிடி சண்டை!!

0

பிரேசிலின் சல்வேடார் நகரில் இருந்து சா பவுலோ நகரத்திற்கு கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானம் டேக் ஆப் ஆவதற்கு சில நிமிடங்களே இருந்தது. அப்போது விமானத்தில் சில பெண் பயணிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 15 பெண் பயணிகள் தங்களுக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். முடியைப் பிடித்து இழுத்தும், ஆடைகளை பிடித்து இழுத்தும் சண்டையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை விலக்கி விடுவதற்கு விமான பணிப்பெண்களும் படாத பாடு பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்து விமான பணிப்பெண் ஒருவர் கூறுகையில், “விமானத்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்த ஒரு பெண் பயணியிடம் சக பெண் பயணி ஒருவர் தனது மாற்றுத்திறனாளி மகளுக்காக ஜன்னல் ஓர இருக்கையை விட்டு தருமாறு கேட்டு உள்ளார். ஆனால், ஜன்னல் ஓரத்தில் இருந்த அந்த பெண் பயணி இருக்கையை மாற்றிக் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இரு பெண்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சண்டையிட தொடங்கினர். இதனால், நாங்கள் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார். விமானத்தில் ஜன்னல் ஓர இருக்காகாக தொடங்கிய இந்த சண்டையால் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. இதனால், பிற பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் கூறுகையில், “2-ம் தேதி இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது.

சண்டையிட்ட அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. விமானத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். பயணிகளின் பாதுகாப்பு கருதியே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.