;
Athirady Tamil News

திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்காததை தட்டிகேட்ட நண்பரை அடித்து கொன்ற மணமகன்!!

0

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பினு (வயது 36). பினுவும் அதே பகுதியை செபாஸ்டின், விஷ்ணு ஆகியோரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். நண்பர்களில் விஷ்ணுவுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் செபாஸ்டினுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார். திருமண நாள் நெருங்கி வந்த நிலையில் செபாஸ்டின் அவரது நண்பர் பினுவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் காத்திருந்தும் அவர் பினுவை பார்க்கவும் இல்லை, அழைப்பிதழும் கொடுக்கவில்லை. இதுபற்றி பினு தனது மற்ற நண்பர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்களுக்கு அழைப்பிதழ் வந்து விட்டதாக கூறினர். உயிருக்கு உயிராக பழகிவிட்டு தனக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்காதது பினுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் பினு, சம்பவதன்று செபாஸ்டின் வீட்டுக்கு சென்றார். அங்கு நின்ற படி தனக்கு ஏன் திருமண அழைப்பிதழ் தரவில்லை என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதுபோல இன்னொரு நண்பரான விஷ்ணுவின் வீட்டுக்கும் சென்று சத்தம் போட்டார். அவர்கள் பினுவை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் ஆவேசமாக பேசியபடி இருந்தார். பினுவின் ஆபாச வார்த்தைகளால் ஆத்திரம் அடைந்த விஷ்ணு, மணமகன் செபாஸ்டினுடன் சேர்ந்து அவரை தாக்கினார். மேலும் அவரை அரிவாளால் வெட்டவும் செய்தனர். இதில் பினு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பினு பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து கோட்டயம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பினுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பினு இறந்த தகவல் அறிந்ததும், அவரது நண்பர்கள் விஷ்ணு, மணமகன் செபாஸ்டின் இருவரும் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண அழைப்பிதழ் கொடுக்காததை தட்டி கேட்ட வாலிபரை நண்பர்களே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.