;
Athirady Tamil News

வடக்கிலும் தெற்கிலும் நினைவு கூரல்களில் சிக்கிக்கொண்ட அரசாங்கம்

0

எம்.எஸ்.எம். ஐயூப்

அரசாங்கம் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூர்ந்தும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நடத்தியும் ஒரு வாரத்துக்கு மேலாகிய போதிலும் அவற்றோடு எழுந்த சில சர்ச்சைகளில் அரசாங்கம் இன்னமும் சிக்கியிருக்கிறது.

இன்னமும் சிங்கள தேசியவாத சக்திகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக அரசாங்கத்தை மிக மோகமாகத் தாக்கி வருகின்றன. அரசாங்கம் அவ்விமர்சனங்களை அவ்வளவாகப் பொருட்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளா விட்டாலும், உண்மையிலேயே அரச தலைவர்கள் அவற்றுக்குப் பதிலளிக்கத் தயங்குவதாகவே தெரிகிறது.

போரில் உயிரிழந்த போர் வீரர்களை நினைவு கூர்வதற்காக இவ்வருடம் மே 19ஆம் திகதி அரசாங்கம் நடத்திய நிகழ்ச்சி பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறும் என்று அரசாங்கம் முதலில் அறிவித்ததையடுத்தே முதலாவது சர்ச்சை உருவாகியது.

இந்த அறிவித்தலின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதில் கலந்து கொள்வதில்லை என்றே தெரிந்தது.இதனை எதிர்க்கட்சிகளும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி முப்படைகளின் பிரதம கட்டளை அதிகாரியாவார். போரில் உயிர் நீத்த போர் வீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் முப்படைகளின் பிரதம கட்டளை அதிகாரி கலந்த கொள்ளாவிட்டால் அதற்கான காரணத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று பலர் வாதிட்டனர்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தர வரிசை பிரகாரம் இராணுவ நிகழ்ச்சியொன்றில் பீல்ட் மார்ஷல் ஒருவருக்கு மேல் முப்படைகளின் பிரதம கட்டளை அதிகாரியான ஜனாதிபதி மட்டுமே இருக்க முடியும் என்றும் எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவ்வாறான நிகழ்ச்சியொன்றுக்குத் தலைமை தாங்க முடியாது என்றும் சிலர் சுட்டிக் காட்டினர்.

ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொள்ளாமைக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் நெருக்குதல் காரணமென்றும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த தமிழர்கள் காரணமென்றும் பலர் அவரவர் விரும்பியவாறு வரைவிலக்கணம் செய்தனர். ஜனாதிபதி தமிழர்களுக்கு அடிபணிந்து செயற்படுகிறார் என்பதே அவர்களது வாதமாகியது.

இவற்றுக்குப் பதிலளிக்காமலிருந்த அரசங்கம் நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று கடந்த 18ஆம் திகதி அறிவித்தது. ஜனாதிபதியும் அதில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் இந்த குழப்பமான நிலைமையைப் பற்றிக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், “ஜனாதிபதி, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே இருந்தார் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறும் என்று வெளியான அறிவித்தல் தகவல் பரிமாற்றத்தின் போது, ஏற்பட்ட குளறுபடியொன்று” என்றும் கூறினார். ஆனால், அதனை எவரும் ஏற்றுக்கொண்டு இருப்பார் என்று கூற முடியாது.

அது தகவல் பறிமாற்றலின் போது, ஏற்பட்ட குளறுபடியாக இருந்தால், தகவல் திணைக்களமோ அல்லது ஜனாதிபதி செயலகமோ உடனடியாக அதனைத் திருத்தியிருக்கலாம். ஆனால், அரசாங்கம் இறுதி வரை அவ்வாறு செய்யவில்லை.

அதாவது இறுதி நேரம் வரை அரசாங்கத்தில் எவரும் ஜனாதிபதியின் வருகையை எதிர்பார்க்கவில்லை என்பதாகும்.இது அரசாங்கம் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் அநாவசியமாகத் தேடிக் கொண்ட பிரச்சினையொன்றாகும்.

படையினரைப் புகழும் இது போன்ற நிகழ்ச்சிகள் நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கலாம் என்றும் எனவே, அதில் ஜனாதிபதி கலந்துகொள்ளக்கூடாது என்றும் தேசிய மக்கள் சக்தி முதலில் கருதியிருக்கலாம். அது நியாயமான கருத்துமாகும்.

ஆயினும் இன்றைய நிலையில், இது போன்றதோர் நிகழ்ச்சியைத் தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்தவுடன் இரத்துச் செய்ய முடியாது. அதனை நடத்துவதாக இருந்தால் ஜனாதிபதி அதில் கலந்து கொண்டாலும், இல்லாவிட்டாலும் அதன் நன்மை தீமை எதையும் தேசிய மக்கள் சக்தியே ஏற்க வேண்டும்.

எனவே, அதனை நடத்துவதாக இருந்தால் ஜனாதிபதி அதில் கலந்து கொள்ளாது புதியதோர் சர்ச்சையை உருவாக்கி இனவாதிகளுக்கு தீனி போடுவதை விட அவர் அதில் கலந்து கொள்வதே சிறந்ததாகும்.படை வீரர்களை நினைவு கூரும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி நிகழ்த்திய உரையையும் பல சிங்கள தேசியவாதிகள் விமர்சிக்கின்றனர்.

அவர் படை வீரர்களைப் போர் வீரர்கள் (ரன விருவோ) என்று கூறாமல் படை வீரர்கள் (செபலு) என்று கூறினார் என்றும் பயங்கரவாதத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்கவில்லை என்றும் போர் வெற்றி என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை என்றும் அவர்கள் அவரை விமர்சிக்கின்றனர்.

இந்த பிரச்சினையைப் பற்றியும் மேற்படி, தொலைக்காட்சி நேர்காணலின்போது, அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “இது போன்ற விடயங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது, மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

படையினரைப் போர் வீரர்கள் என்று அழைப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்கப்பட்ட போது, “அதில் பிரச்சினை இல்லை என்றும் நாம் அச்சொல்லைப் பாவிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டிலும் தாம் இருப்பதில்லை என்றும் ஆயினும், நாம் அச்சொல்லுக்குப் பதிலாகப் படைவீரர்கள் படை அதிகாரிகள் என்ற சொற்களையே விரும்புகிறோம்” என்றும் கூறினார்.

இது ஒரு வித நழுவலான பதில் என்பதில் சந்தேகமே இல்லை. ஆயினும், அரச தலைவர்கள் அவ்வாறு ஏன் நழுவுகிறார்கள் என்பதையே கவனிக்க வேண்டியுள்ளது. அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பதாகத் தெரிகிறது.

எனினும், அரசியல் காரணங்களுக்காகத் தமிழ் தலைவர்கள் அதனைப் பாராட்டத் தயாராக இல்லை. இது முழு மனதோடு செய்த காரியம் அல்ல என்றும் அவர்கள் கூறலாம்.

அதேவேளை, இது புலம்பெயர் தமிழர்களின் மனதை வெள்ள மேற்கொண்ட முயற்சி என்றும் தமக்கு வாக்களித்த வட பகுதி தமிழர்களைத் திருப்திப்படுத்த மேற்கொண்ட முயற்சி என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிங்கள தேசியவாத மற்றும் இன வாத தலைவர்கள் கூறுகின்றனர்.

அதாவது நல்லிணக்கத்தை நோக்கி சிறியதோர் அடி எடுத்து வைக்க முற்பட்டதால் தேசிய மக்கள் சக்தி இரு புறத்தாலும் அடி வாங்குகிறது.இந்த நினைவு கூரல் விடயத்தில் அரசாங்கம் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை எதிர்நோக்கவும் நேர்ந்தது.

மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் போரில் கொள்ளப்பட்ட தமிழ் மகளை நினைவு கூருவதற்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பொலிஸாரும் படையினரும் இடையூறுகளை விளைவித்தனர்.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் போலவே தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்திலும் அவ்வாறான இடையூறுகள் இடம்பெறவில்லை.

ஆனால், கனடாவில் தமிழினப் படுகொலை நாள் அனுஷ்டானத்தை அரசாங்கம் எதிர்த்தது. அதேபோல, கடந்த 10ஆம் திகதி அந்நாட்டில் ஒண்டாரியோ பிராந்தியத்தில் பிரம்ப்டன் நகரில் தமிழ் படுகொலை நினைவுச் சின்னம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து, வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத் இலங்கைக்கான கனேடியத் தூதுவரை வெளிநாட்டு அமைச்சுக்கு அழைத்து அது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை கனேடிய அரசாங்கத்துக்குத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாகவும் மேற்படி நேர்காணலில் அமைச்சரிடம் கேட்கப்பட்டது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் கருத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அதற்கு அவர் பதிலளித்தார். அத்துடன், இது போன்ற கருத்துக்களால் நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு இடையூறுகள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் கருத்தை நிராகரிக்க அரச தரப்பில் இரண்டு பிரதான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 2014ஆம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் விசாரணையொன்று நடத்தப்பட்டது.

பின்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற மூவரால் இந்த விசாரணை நடத்தப்பட்டது. சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான சட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே அவ்விசாரணை நடைபெற்றது.

2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவ்விசாரணையின் அறிக்கையில், எங்கும் இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை. இதுவே அரசாங்கத்தின் ஒரு வாதமாகும். அதேபோல் இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்க அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் 2010ஆம் ஆண்டு ஒரு குழவை நியமித்தார்.

அக்குழுவும் விசாரணையொன்றை நடத்தி அறிக்கையொன்றை வெளியிட்டது. அதிலும், இலங்கையில் இனப் படுகொலை நடைபெற்றதாக குறிப்பிடப்படவில்லை. இது அரசாங்கத்தில் இரண்டாவது வாதமாகும்.

இவ்வாறு வடக்கிலும் தெற்கிலும் நினைவேந்தல்கள் விடயத்தில் நடுநிலையைக் காண அரசாங்கம் முயன்றாலும் இரு புறத்தாலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு நிராகரிக்கப்படுவதாகவே தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.