;
Athirady Tamil News

கடலட்டை பண்ணைகள் தொடர்பில் வதந்திகளை பரப்பி எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்!!

0

பூநகரி கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக பிரதேச செயலகத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என பூநகரி கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்தொழிலாளர் சங்க செயலாளர் க. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பூநகரி பகுதியில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் காணப்படுவதாகவும் , கடற்படையினர் , கடற்தொழில் அமைச்சர் , திணைக்களங்களின் பின்புலத்துடன் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அக் குற்றசாட்டினை முற்றாக மறுக்கின்றோம். பூநகரி கிராஞ்சி , இரணைதீவு , வலைப்பாடு உள்ளிட்ட கடற்பகுதிகளில் காணப்படும் பண்ணைகள் உரிய அனுமதிகள் பெறப்பட்ட சட்டரீதியான பண்ணைகளே. அங்கு தற்போது 82 பண்ணைகள் உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

சிலர் அனுமதிகள் பெறப்படாமல் பண்ணைகள் அமைத்து இருந்தனர். அவற்றுக்கு எதிராக பிரதேச செயலகம் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்தது.

ஏனைய தொழில்களுக்கு பாதிப்பு இல்லாமல் கடல் வளங்களை பாதுகாப்பாக பேணுவதற்கு உரிய ஏற்பாடுகளுடன் அனுமதிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மூன்று நான்கு வருடங்களாக போராடி , பல திணைக்களங்களுக்கு சென்று , உரிய அனுமதிகளை பெற்று நாம் பண்ணை அமைத்து , தொழிலை முன்னெடுக்கும் வேளையில் ஊடகங்களுக்கு பொய்களை கூறி எமது வாழ்வாதாரங்களை அழிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எம்மால் வளர்க்கப்படும் கடலட்டைகளை எமது பிரதேச வியாபாரி ஊடாகவே நாம் விற்பனை செய்கிறோம். அதனூடாக எமது கிராமத்திற்கே வருமானம் அதிகரித்துள்ளது.

கலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ள கிராமங்கள் பொருளாதார ரீதியில் மிக பின் தங்கிய நிலைகளில் காணப்படும் கிராமங்கள் ஆகும். உரிய உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை.

இந்த நிலையில் பண்ணைகள் அமைக்கப்பட்டு அதனூடாக கிடைக்கப்பெறும் இலாபங்கள் ஊடாக எமது கிராமத்தை முன்னேற்றும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

எமது கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியுள்ளோம். பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பண உதவிகளை செய்துள்ளோம்.

கடலட்டைகள் ஊடாக எமக்கு கிடைக்கும் இலாபங்கள் மூலம் எமது கிராமத்தையும் முன்னேற்ற முடியும். எனவே கலட்டை பண்ணைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பங்களை உண்டு பண்ண வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

கடலட்டை வளர்ப்பில் , கடலட்டை திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. பண்ணைகளுக்குள் புகுந்து அட்டைகளை திருடி செல்கின்றனர். மழை காலங்களில் நீர் மட்டம் உயரும் போது அட்டைகள் அழிவடைகிறது. அவற்றினால் ஏற்படும் நட்டங்களுக்கு நஷ்ட ஈடுகளோ , காப்புறுதிகளோ இல்லை. அவ்வாறான சூழலில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தே எமது வாழ்வாதாரத்தை உயர்த்த போராடி வருகிறோம். எனவே பண்ணைகள் தொடர்பில் வாய்க்கு வந்ததை பேசி எமது வயிற்றில் அடிக்காதீர்கள் என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.