சுகாதார தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு
யாழ் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர்.
யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் இடம்பெற்ற நிலையில், பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரியே சுகாதார தொழிலாளர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், அனைத்து மாநகர, நகர சபைகளினது சுகாதார பகுதிகளும் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகின்றது. ஆனால் யாழ் மாநகரின் சுகாதார பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகிவருகின்றது.
எனவே இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும்.
அத்துடன் ஊழியர்களது நிரந்தர நியமனம், கண்காணிப்பாளர்களது இடமாற்றம், திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, முறையான முன்னறிவிப்போ தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை. சதிகள், பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ளவர்கள், தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றார்.



