;
Athirady Tamil News

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு: ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்கள் அழிப்பு

0

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க ராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷன் நடத்தும் அமெரிக்க ராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆபரேஷன் எபிக் ஃபியூரியின் முதல் 100 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 2,000 இலக்குகளை தாக்கியுள்ளோம். ஈரானின் வான் பாதுகாப்பு மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளது. ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்துள்ளோம்.

ஈரான் கடற்படையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டோம். ஈரான் கடற்படையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க்கப்பல்கள் இருந்தன. அனைத்தையும் மூழ்கடித்துவிட்டோம். சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையாக இருந்த ஈரானின் அனைத்து இடங்கள் மீதும் பி-2 குண்டு வீச்சு விமானங்கள், எப்-35 போர் விமானங்கள், டொமஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பிராட் கூப்பர் கூறினார்.

ஈரான் கடற்படையில் ஐஆர்ஐஎஸ் மக்ரான் என்ற போர்க் கப்பல் இருந்தது. ஆயில் டேங்கர் கப்பலைப் போர்க் கப்பலாக மாற்றி ஈரான் பயன்படுத்தி வந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் முகாமிட்டிருந்த இந்த கப்பலை அமெரிக்க கடற்படை தாக்கி செயல் இழக்கச் செய்தது. ஈரான் கடற்படையில் பகேரி என்ற போர்க் கப்பல் கடந்தாண்டு சேர்க்கப்பட்டது. இதில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இருந்தன. இதையும் அமெரிக்க கடற்படை தாக்கி மூழ்கடித்துவிட்டது.

ஜமரான் என்ற போர்க் கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே போல் ஈரான் கடற்படையில் இருந்த சாஹந்த், சபாலன், பேயந்தர், நக்தே ஆகிய போர்க் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை தாக்கி அழித்துள்ளது. இதேபோல் ஈரானின் நீர்மூழ்கி கப்பலை பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மூழ்கடித்தது. தரேக் என்ற நீர்மூழ்கி உட்பட பல சிறிய நீர்மூழ்கி படகுகளையும் அமெரிக்கா மூழ்கடித்தது.

இறுதியாக இந்தியாவுடன் விசாகப்பட்டினத்தில் மிலன் 2026 கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பிய ஈரானின் தேனா என்ற போர்க் கப்பலை இலங்கை அருகே, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் டார்பிடோ குண்டுகளை ஏவி நேற்று அதிகாலை மூழ்கடித்தது. இதில் 80 வீரர்கள் உயிரிழந்தனர். இங்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை மீட்பு பணியை மேற்கொண்டது. ஈரான் கடற்படையில் மொத்தம் இருந்த 17 போர்க் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை அழித்துவிட்டதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் ஈரானும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளுடன் ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பகுதிகளிலும் போர்ப் பதற்றம் நீடிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.