;
Athirady Tamil News

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! 174 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; 79 பேர் மாயம்!

0

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அங்கு 79 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகளில் இந்தோனேசியாவின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவில், சும்தரா தீவில் பெய்த கனமழையால் அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதில், அதிகளவில் பாதிக்கப்பட்ட வடக்கு சுமத்ராவில் மட்டும் 116 பேர் பலியாகியதுடன்; 42 பேர் மாயமாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆச்சே மாகாணத்தில் 35 பேர் பலியானதுடன் 25 பேர் மாயமாகியுள்ளனர். இதேபோல், மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 23 பேர் பலியாகியதுடன், 12 பேர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், மாயமானவர்களைத் தேடு பணியில் இந்தோனேசியாவின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பெரும்பாலான நிலச்சரிவு பகுதிகளில் மீட்புப் படையினரால் செல்ல முடியவில்லை எனவும்; இதனால், மீட்புப் பணிகள் தாமதமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுமத்ராவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியான மக்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாக, இந்தோனேசியா அதிகாரிகள் நேற்று (நவ. 28) அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,900-க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, சும்தரா தீவின் ஆச்சே மாகாணத்தில் கடந்த நவ.27 ஆம் தேதி காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.