வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம்!
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா (வயது 80) பல்வேறு உடல் நல பாதிப்புகளினால் கடந்த நவ.23 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவருக்கு இதயம் மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் அடங்கிய குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது என மருத்துவர்கள் கூறியதாக, பிஎன்பி கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கலீதா ஜியாவின் உடல் நலம் குணமடைய வேண்டி அவரது ஆதரவாளர்கள் மற்றும் பிஎன்பி தொண்டர்கள் இன்று சிறப்புத் தொழுகைகள் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் வரும் 2026 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் பொது தேர்தல்கள் நடத்தப்படும் என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வங்கதேச அரசியலில் தற்போது கலீதா ஜியாவின் பிஎன்பி கட்சி முன்னணி வகித்து வருகின்றது. மேலும், கலீதா ஜியா வங்கதேசத்தின் மறைந்த முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமானின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.