;
Athirady Tamil News

வடக்கில் ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கப்களின் பாவனையை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை

0

வடக்கில் லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

குறித்த கூட்டத்தில், லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது. யாழ்ப்பாண நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் தரமற்ற சொப்பிங் பைகள், ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் மற்றும் லஞ்சீற் என்பன இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாகச் சுகாதார மருத்துவ அதிகாரிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களின் உரிமங்களை ரத்துச் செய்ய உள்ளூராட்சி மன்றங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள புதிய சுற்றாடல் சட்டவரைவு நடைமுறைக்கு வந்ததும், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் எல்.சி.ஆனந்த் தெரிவித்தார்.

குறிப்பாக, நல்லூர் பெருந்திருவிழா உள்ளிட்ட ஆலய உற்சவக் காலங்களில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பிளாஸ்டிக் கப்களின் பாவனையை முற்றாகக் கட்டுப்படுத்த வேண்டும் 

, யாழ். மாநகர சபை கடைகளுக்கான அனுமதியை வழங்கும்போது இதனை ஒரு கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்

, லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. அதனை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

  

You might also like

Leave A Reply

Your email address will not be published.