;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்

0

உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷியா திங்கள்கிழமை அதிகாலை நடத்திய பயங்கர வான்வழித் தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா். 53 போ் காயமடைந்தனா்.

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரான காா்கிவ் ஆகியவற்றை உலுக்கிய இத்தாக்குதலில், கீவ் நகரில் மட்டும் 5 பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியாளா்கள் உயிரிழந்தனா். அங்குள்ள 25 அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்கள் தீக்கிரையாகின.

குறிப்பாக, 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த உலகப் புகழ்பெற்ற ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய ஆன்மிக தலமான பெச்சொ்ஸ்க் லாவ்ரா தேவாலயம் மேற்கூரை தீப்பற்றி எரிந்து, சேதமடைந்தது.

ரஷியா ஒரே இரவில் 70 ஏவுகணைகள் மற்றும் 611 ட்ரோன்களை ஏவியதாகவும், அதில் 50 ஏவுகணைகள் மற்றும் 582 ட்ரோன்களை தாங்கள் வீழ்த்தியதாகவும் உக்ரைன் அறிவித்தது.

பிரான்ஸில் ‘ஜி7’ உச்சிமாநாடு தொடங்கியுள்ளதையொட்டி, அதற்கு முன்னதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடிய மறுநாளே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலைக் கண்டித்த ஸெலென்ஸ்கி, ‘இது கிறிஸ்தவத்துக்கு எதிராக ரஷியா செய்த மிகப் பெரிய குற்றம்’ என்று சாடினாா். அதேநேரம், உக்ரைனின் ஆயுத உற்பத்தி ஆலைகளே தாக்கப்பட்டதாகவும், தேவாலயம் மீதான தாக்குதலை உக்ரைனின் வான் பாதுகாப்பு ஏவுகணையே தவறி விழுந்து ஏற்படுத்தியதாகவும் ரஷியா பதிலளித்தது.

‘தேவாலயத்தை ரஷியா தாக்கியதாக உக்ரைனும், அதன் நட்பு நாடுகளும் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ‘அப்பட்டமான பொய்’. இவ்விவகாரத்தில் ஆதாரமின்றி ரஷியா மீது பழி சுமத்தும் ஐரோப்பிய தலைவா்கள், ரஷியாவில் மாணவா் விடுதி மற்றும் அருங்காட்சியகத்தை உக்ரைன் தாக்கியது குறித்து மௌனம் சாதித்தனா்’ என்றும் ரஷியா குற்றஞ்சாட்டியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.