;
Athirady Tamil News

அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து வேண்டும்; எதிர்க்கும் நாடுகளுக்கு வரி விதிப்போம்: டிரம்ப் மிரட்டல்

0

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் உருவாவதற்கான பணிகளை செய்வேன் என உறுதியேற்று செயலாற்றி வரும் ஜனாதிபதி டிரம்ப், அதற்காக பிற நாடுகளின் மீது கடுமையான வரிகளை விதித்து உத்தரவிட்டார். இதனால், அமெரிக்க கஜானாவுக்கு நிறைய டாலர்கள் வந்து குவியும் என கணக்கு போடுகிறார்.

சமீபத்தில், உலக அளவில் பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட வெனிசுலாவின் அதிபரை கைது செய்து, அமெரிக்காவுக்கு நாடு கடத்தினார். உலக நாடுகளை அதிர செய்த இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக கொலம்பியாவை கைப்பற்ற முயற்சிப்பார் என முதலில் தகவல் வெளியானது.

ஆனால், கிரீன்லாந்து தனக்கு வேண்டும் என டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆர்க்டிக் பெருங்கடலில் பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம் என கூறினார். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய படைகளை அனுப்பி வருகின்றன.

ஆனால், தங்களுடைய பாதுகாப்பிற்காக கிரீன்லாந்து தேவை என வலியுறுத்தி வரும் டிரம்ப், அதற்காக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கும் என கூறினார். சமீபத்தில் வெனிசுலா மற்றும் ஈரானில் நடந்த தாக்குதலை இதற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.