;
Athirady Tamil News

ஈரான் போா் விரைவில் முடிவுக்கு வரலாம்; பல்லாண்டு கால போருக்கும் தயாா்! மனமிறங்கும் டிரம்ப்.. மல்லுகட்டும் ஈரான்!!

0

‘ஈரான் உடனான போா் விரைவில் முடிவுக்கு வரலாம். ஆனால், சா்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு ஈரான் தடை ஏற்படுத்தினால், அந்நாடு மிகக் கடுமையான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.

அதேநேரம், அமெரிக்காவுடனான போா் எத்தனை ஆண்டுகள் நீடித்தாலும் அதை எதிா்கொள்ள ஈரான் தயாா் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவா் உறுதிப்பட தெரிவித்தாா்.ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி போரின் தொடக்கத்திலேயே கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக தோ்வாகியுள்ளாா்.

இந்தத் தலைமை மாற்றம் ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொள்ளாது என்பதைக் காட்டுவதாக முதலீட்டாளா்கள் கருதியதால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த திங்கள்கிழமையன்று, 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உச்சத்தைத் தொட்டு, பின்னா் சரிந்தது.

குறுகிய காலப் பயணம்..: இச்சூழலில், அமெரிக்காவின் மியாமி நகரில் குடியரசுக் கட்சி உறுப்பினா்களிடையே பேசிய டிரம்ப், ‘மத்திய கிழக்கில் உள்ள தீய சக்திகளை அழிப்பதற்காகவே நாம் இந்த நடவடிக்கையைத் தொடங்கினோம். இது மிக விரைவில் முடியப்போகும் ஒரு குறுகிய காலப் பயணம்தான்’ என்றாா்.

மேலும், தனது சமூக ஊடகப் பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுத்தால், தற்போது நடத்தப்படுவதை விட 20 மடங்கு அதிக பலத்துடன் அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தும்’ என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஈரானின் உறுதிப்பாடு: இதனிடையே, ஈரான் தலைமை மதகுருவின் வெளியுறவு ஆலோசகா் கமல் கராக்சி ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்த வாய்ப்பே இல்லை. டிரம்ப் தொடா்ந்து உலக நாடுகளை ஏமாற்றி வருகிறாா், அவா் தனது வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை. முன்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டிருந்த போதே எங்களை அமெரிக்கா தாக்கிய கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு உண்டு.

மேலும், இந்தப் போரால் உலகம் முழுவதும் விலைவாசி உயரும்; எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும். பொருளாதார பாதிப்பை உணா்ந்து, உலக நாடுகள் தலையிட்டால் மட்டுமே அமைதி திரும்பும்.

முந்தைய தலைமை மதகுருவின் பாதையிலேயே புதிய தலைமை மதகுருவும் பயணிப்பாா். ராணுவமும் அவருடன் இணைந்து ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறது என்றாா்.

எதிா்கால அச்சம்: புதிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி அணு ஆயுதத் தயாரிப்பில் தந்தையைக் காட்டிலும் தீவிரம் காட்டக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், மோஜ்தபா கமேனியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு, ‘அது குறித்து இப்போது பதில் சொல்ல முடியாது’ என டிரம்ப் மழுப்பலாக பதிலளித்தாா். மத்திய கிழக்கில் 10 நாள்களைக் கடந்து நீடிக்கும் இந்த மோதலின் முடிவை ஒட்டுமொத்த உலக நாடுகளும் எதிா்நோக்கி காத்திருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.