அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில் , பாலமுனை, பிரதேசங்களில் திடீர் சோதனை
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிற்குட்பட்ட பல்வேறு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள இரவு நேர உணவகங்களில் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திடீர் சோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு தரமற்ற உணவுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.கடந்த திங்கட்கிழமை (27) இரவு முதல் இவ் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அதிகாரிகளினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதன்போ
குறித்த பரிசோதனை யாவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் தலைமையில் உணவு மற்றும் மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா ,சம்மாந்துறை ,கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது சுமார் 42 உணவகங்கள் மற்றும் ‘டேஸ்ட்’ கடைகள் விரிவாகச் சோதனை செய்யப்பட்டன. குறிப்பாக உணவகங்களின் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகள் ஆகியவற்றின் தூய்மை நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்தச் சோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார சீர்கேடான முறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், சுகாதார விதிகளை மிகவும் மோசமான முறையில் மீறிய 10 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் சுத்தமான சூழலை உறுதிப்படுத்துவது தொடர்பில் கடுமையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
பிராந்தியத்தில் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களிலும் இவ்வாறான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும், பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இதன்போது சுகாதார சீர்கேடான முறையில் உணவுப் பொருட்களைக் கையாளுதல், பழைய எண்ணெயைப் பயன்படுத்துதல், மற்றும் சமைப்பதற்குப் பொருத்தமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்கள், துருப்பிடித்த இரும்புத் தட்டுகள் (rusty iron trays) போன்றவற்றில் உணவுகளைத் தயாரித்தல் கண்டறியப்பட்டது. அத்துடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகளும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
இதேவேளை சுகாதார விதிகளை மீறி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 04 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இது தவிர அட்டாளைச்சேனை ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.அலாவுடீன் வழிகாட்டலில் அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களில் இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, உணவகங்களின் சமையலறைகள், களஞ்சிய அறைகள் மற்றும் உணவு தயாரிக்கப்படும், பரிமாறப்படும் இடங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. அத்துடன் மனித நுகர்வுக்கு ஒவ்வாத மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட பெருமளவிலான உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.
இதேவேளை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட 03 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், உணவக உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
